சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்ல சொல்ல அது வளர்ந்து கொண்டேதான் போகும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள காமராஜர் மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்டெம் செல் சிகிச்சை பிரிவை தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தன் கணவருடன் வந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி இன்று (செப்டம்பர் 4) துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜனிடம் சனாதனத்தை ஒழிப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “எதையுமே அழித்து ஒழித்து விட முடியாது. சனாதனத்தை பற்றி பல பேர் சொல்லி இருந்த போதும் தற்போது தம்பி மிகவும் பதற்றத்தில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய இந்த சனாதனம் நோயை பரப்பவில்லை, தர்மத்தை பரப்புகிறது.
தர்மத்தை பரப்பி வரும் இந்த சனாதனத்தை எப்படி ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன என்றால் அழிக்க முடியாது. இது வாழ்வியல் முறை.
அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலினை மிகவும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் துர்கா ஸ்டாலின் இந்து மதத்திற்கு தற்போது கிரீடம் சூட்டி வருகிறார்.
குருவாயூர் கோவிலுக்கு சென்று அங்குள்ள சுவாமிக்கு என்ன கொடுத்தார் என்பதை நான் பார்த்தேன். நிச்சயம் அவர்களின் குடும்பத்தை நான் பாராட்டுகிறேன்.
என்ன காரணம் என்றால் தர்மத்தை நல்ல முறையில் பின்பற்றுபவர்களுடைய காரணத்தினால் தான் இவர்கள் எல்லாம் நல்ல முறையில் இருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்தாக உள்ளது.
தற்போது பதட்டத்தில் உள்ள உதயநிதி அந்த பதட்டத்தை தணித்து விட்டால் நன்றாக இருக்கும்.
சனாதன தர்மத்தை அழித்து ஒழித்து விட முடியாது. நீங்கள் இதுபோன்று சொல்ல சொல்ல சனாதன தர்ம கொள்கையானது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட சதவீத மக்கள் இதை பின்பற்றி வருகிறார்கள் அவர்களை புண்படுத்த வேண்டாம்.
உதயநிதி ஸ்டாலின் சில பேரை புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பல பேரை புண்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்வதற்கு முன்பாக, உங்கள் தந்தையிடம் சென்று முதல் வேலையாக இந்து அறநிலையத்துறை என்ற ஒரு துறையை வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும்.
கோயில் வேண்டாம் சாமி வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் உண்டியல் மட்டும் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அதனால் தான் நான் இதைச் சுட்டிக்காட்டி கூறுகிறேன்.
முதலமைச்சர் எல்லா மதத்திற்கும் ஒன்றானவர் எனச் சொல்லும் அவரிடம் ஒன்றை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்துவாக இருக்கும் எனக்கு தீபாவளி வாழ்த்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து ஏன் கூறுவதில்லை?
இதை சொல்லாத காரணத்தால் தான் பாகுபாட்டை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். அதனால்தான் இதை பதற்றத்தோடு நீங்கள் இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சனாதன தர்மத்தில் சாதிய பாகுபாடுகள் இருக்கிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “சனாதன தர்மம் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது என்றால் தற்போது ஏன் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். பள்ளிக்குள் இதுவரை சாதியே புகாமல் இருந்தது. தற்போது அது புகுந்து இருக்கிறது.
சமூகநீதியில் சனாதன தர்மம் என்பதை விட சமாதான தர்மம் என எடுத்துக் கொள்ளலாம். இதையே சமாதான தர்மம் என்று வாழ்வியல் முறையை எடுத்துச் சொன்னால் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
இதுபோல் பல விவகாரங்கள் உங்களுக்கு சரியாக புரிவதில்லை ஏனென்றால் நீங்கள் எதையும் சரியாக படிப்பதில்லை” என்று தெரிவித்தார்.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?
“உதயநிதியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்” : மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி கடிதம்!