நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக சமூக ஊடக பக்கங்களில் அக்டோபர் 9ஆம் தேதி மாலை அறிவித்த பின்னர், இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்தன. குறிப்பாக வாடகைத்தாய் சட்டத்தை இருவரும் மீறியுள்ளதாக சிலர் கருத்துக்களை பதிவிட்டனர். இதுகுறித்து, நயன்-விக்னேஷ் சிவன் வட்டாரத்தில் நடந்தது என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்.
இதில் அவர்கள் மின்னம்பலத்திற்கு பிரத்யேகமாக தெரிவித்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்கிறோம்.

“நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். இரட்டை குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என முடிவெடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி, அதற்கான மருத்துவ வழிமுறைகளை அறிந்து கொள்ள பல்வேறு மருத்துவர்களை கலந்து ஆலோசித்துள்ளனர்.
மருத்துவர்கள் இரட்டை குழந்தை பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளையும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியிடம் தெரிவித்துள்ளனர். இது பற்றி நன்கு அறிந்து கொண்ட நயன் விக்கி தம்பதி, தங்கள் குடும்பத்தாரிடமும் இது குறித்த தங்கள் விருப்பங்களையும் ஆலோசனைகளையும் பெற்றனர்.

பின்னர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் வழிமுறையை தேர்ந்தெடுத்த விக்கியும் நயனும், இது குறித்து தங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் அனுமதியையும் பெற்றுள்ளனர்.
இவை அனைத்தும் கடந்த வருடம் (2021) ஜூன் மாத வாக்கில் நடைபெற்றது.
அதன் பிறகு, நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் பரிட்சயமான ஒரு பெண்ணை வாடகை தாயாக இருக்க சம்மதிக்க கேட்டு, அவரும் சம்மதிக்க, அப்பெண்ணிற்கு வேண்டிய அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
மருத்துவர்கள், அப்பெண்ணின் உடல் நிலையை பரிசோதித்து, அவர் கருவை சுமக்கும் தகுதியுடையவரென சான்றளித்த பின், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் அப்பெண்ணின் கர்ப்பப் பையில் தம்பதிகளின் கருமுட்டை வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது.

இந்த சமயத்தில், அப்பெண்ணை 24 மணி நேரமும் கண்காணிக்க ஒரு மருத்துவ குழு நியமிக்கப்பட்டு, அப்பெண்ணை கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, தங்கள் திருமண தேதியை நிச்சயித்த நயன் விக்கி தம்பதி, அதன் படி ஜூன் 9 அன்று திருமணமும் செய்து கொண்டனர்.
சரியாக திருமணமாகி நான்கு மாதம் கழித்து, அக்டோபர் 9 ஆம் தேதி, தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தது தான் மிச்சம்.
பலதரப்பிலிருந்தும் பலவிதமான விமர்சனங்கள், வாழ்த்துகள் என நயன் விக்கி தம்பதி பேசுபொருள் ஆனார்கள். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில் வாடகைத் தாய் குறித்த சட்ட விதிகளை அவர்கள் மீறிவிட்டார்கள் என்றும் சமூக தளங்களில் விவாதங்கள் எழுந்தன. தமிழகத்தின் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “இது குறித்து விக்கி- நயன் தம்பதியிடம் விளக்கம் கேட்கப்படும்” என்று தெரிவித்தார் அமைச்சர்.

இது பற்றி நயன் விக்கி தம்பதிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, “வாடகை தாய் சட்டம்’ 2022 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு நடைமுறைக்கு வந்தாலும், அதற்கான வழிமுறைகள் (Rules & Regulations) ஜூன் 21 2022 ல் தான் அமல்படுத்தப்பட்டது.
ஆகவே திருமணமாகி ஐந்து வருடமான தம்பதிகள் தான் வாடகை தாய் முறையை பின்பற்றவேண்டும் என்ற நெறிமுறை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பொருந்தாது” என தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் அவர்கள் தெரிவித்தபோது, “தற்போது இருக்கும் சட்டத்திற்கு முன்பாக அமலில் இருந்த, THE ASSISTED REPRODUCTIVE TECHNOLOGY (REGULATION) ACT, 2021 படி நயன்தாரா விக்னேஷ் தம்பதி அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியுள்ளனர். இதற்கான அனைத்து சான்றுகளும் பக்காவாக வைத்துள்ளனர்” என தெரிவிக்கின்றனர்.
சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து விஷயங்களும் செய்துள்ள தம்பதிகள், இது தங்கள் பர்சனல் விஷயம் என கருதுவதால் இது குறித்து வெளிப்படையாக பேச தயங்குவதாக மேலும் தெரிவிக்கின்றனர், அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
–வினோத் அருளப்பன்
பாட்டாளி மாடல்: அன்புமணியின் புது முழக்கம்!
சேலம் இளங்கோவன் சம்மன்: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!