நீட் ரகசியத்தை சொல்லுங்கள் உதயநிதி: முன்னாள் அமைச்சர் கேள்வி!

Published On:

| By Kavi

நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி உதயநிதி ஸ்டாலின் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் இன்று (பிப்ரவரி 6) மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார் உதயநிதி.

ADVERTISEMENT

அவரது வருகையை முன்னிட்டு திமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்நிலையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, இதற்கெல்லாம் உதயநிதி பதிலளிப்பாரா என வீடியோ வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.

அதில் அவர், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவுக்காக கடந்த இரண்டு நாட்களாக மதுரையிலே பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்த விழாவில் பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டு இருக்கிற முதியோர் ஓய்வு ஊதியங்களை அந்த பயனாளிகளுக்கு வழங்குவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் முன் வருவாரா?

கடந்த அதிமுக அரசின் திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு அந்த திட்டங்கள் செயல்படுமா, வருமா, வராதா என்று மக்கள் காத்திருக்கிறார்கள். குறிப்பாக மாணவர்கள் சமுதாயத்துக்கு மடிக்கணினி வழங்குகிற திட்டத்திற்குரிய உண்மை நிலையை உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுப்பதற்கு முன் வருவாரா?

ADVERTISEMENT
rb udhayakumar question udhayanidhi

கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூறிய உதயநிதி ஸ்டாலின் அது குறித்து ஏதேனும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடுவதற்கு எதுவும் வாய்ப்பு இருக்கிறதா?

தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டு இருக்கிறதே அதற்கு அவர் என்ன விளக்கம் சொல்லப் போகிறார்? ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரச்சாரம் செய்தாரே அதை நினைவு கூர்ந்து இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளில் அவருடைய பங்களிப்பை பொதுமக்களிடத்தில் விளக்கி சொல்வதற்கு முன் வருவாரா?

இன்றைக்குப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் இது போன்ற திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு முழுமையாகச் செயல்படாமல் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறதே, இதற்கெல்லாம் விளக்கம் அளிப்பாரா?.

மதுரையில் நலத்திட்ட நிகழ்ச்சிக்காக மிகப் பிரம்மாண்டமான அளவிலே செய்திருக்கிற வரவேற்பு ஏற்பாடுகள்,மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என்பதெல்லாம் அறிய மக்கள் , இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- தேர்தல் ஆணையம்!

கையில் சிகரெட்டுடன் ‘தெய்வ திருமகள்’ பேபி சாரா

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share