திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி கோஷ்டி அறிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அரூப் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 207 இடங்களைக் கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களை மட்டுமே பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய பிளவை சந்தித்து வருகிறது. மேற்கு வங்க சட்டசபையில் 60 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாங்களே உண்மையான கட்சி என்றும் குழு தலைவர் ரிதாப்ராதா பானர்ஜி எனவும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனை ஏற்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ரிதாப்ராதா பானர்ஜி நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களில் பெரும்பாலானோர் மமதாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர். 20 மக்களவை எம்.பி.க்கள், திரிபுராவை சேர்ந்த என்சிபிஐ என்ற கட்சியில் இணைந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த பின்னணியில் கொல்கத்தாவில் ரிதாப்ராதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி குழு ஆலோசனை கூட்டம் நேற்று ஜூன் 22-ந் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டார்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஏரூப் ராய் (Arup Roy) அறிவிக்கப்பட்டுள்ளார்
- மமதா பானர்ஜி விரும்பினால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆலோசகர் பதவி வகிக்கலாம்
- கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மமதா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
- ஃபிர்ஹாத் ஹக்கிம், அரூப் பிஸ்வாஸ், ரதின் கோஷ் மற்றும் சபினா யாஸ்மின் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ரிதாப்ராதா பானர்ஜி, ஜாவேத் கான் மற்றும் சந்தீபன் சாஹா ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
