எனது கஷ்ட காலங்களில் உடனிருந்தவர் ஏவிஎம் சரவணன் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் இன்று (டிசம்பர் 4) காலை காலமானார்.
இவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ஏவிஎம் சரவணன் சார் மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்றால் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சரவணன் சார். எப்போதும் அவர் அணியும் வெள்ளை டிரஸ் போன்று அவரது உள்ளமும் வெள்ளையாக இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். ஒரு பத்து நிமிடம் பேசினால் பத்து முறை அப்பச்சி, அப்பச்சி என்று சொல்லி அவரது தந்தையை ஞாபகப்படுத்துவார்.
என் மேல் மிகவும் அன்புடையவர். எனது நலம் விரும்பி. எனது கஷ்ட காலங்களில் எல்லாம் எனக்கு துணையாக நின்றவர். ஏவிஎம்மில் நான் 9 படம் நடித்துள்ளேன். அந்த 9 படங்களும் பெரிய அளவில் ஹிட்டானது.
அதற்கு முதன்மையான காரணம் சரவணன் சார் என்றால் அது மிகையாகாது. தமிழில் எண்பதுகளில் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை. பின்னர் சிவாஜி மிகப்பெரிய பிரமாண்டமான படம். அதேபோல் 2020 ல் இன்னும் ஒரு பிரம்மாண்டமான படம் எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
அது நடக்கவே இல்லை. அவரது மறைவு மிகவும் மனதை பாதிக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்தார்.
