சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் கடிதம்!

Published On:

| By Selvam

சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்து விலகியதற்கு திமுக வருந்தி திருந்த வேண்டும். எந்த காலத்திலும் உங்கள் மகனாகிய சீமான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் அண்மையில் திமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கும் அவருக்குமான மோதல் தான் காரணம் என்று பேசப்பட்டது. இருப்பினும் சுப்புலட்சுமி ஜெகதீசன் இதுகுறித்து கருத்து எதுவும் கூறவில்லை.

seeman writes letter to subbulakshmi jagadeesan

திமுகவிலிருந்து விலகிய நான் எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை. பாஜக, அதிமுக கட்சிகள் நான் இணைவதற்கு தகுதியான கட்சிகள் இல்லை என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

” சிறு வயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன்.

ADVERTISEMENT

உங்களை ‘அம்மா ’ என்று அழைப்பதில் பேருவகைக் கொள்கிறேன். விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த அனைவரும் உங்களை ‘சுப்பக்கா’ என்று பாசத்தோடு அழைத்த அந்தக் காலகட்டத்தில் உங்களின் அருமை எனக்குப் புரியவில்லை.

seeman writes letter to subbulakshmi jagadeesan

ஆனால் இப்போதுதான் நீங்கள் எப்பேர்ப்பட்ட கொள்கை உறுதிகொண்ட பெண்மகள் என்பதையும், எவ்வளவு போற்றுதலுக்குரியவர் என்பதையும் உணர்கிறேன். உங்களை இழந்ததற்கு திமுக தான் வருந்தி, திருந்த வேண்டும்.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் திமுக தலைமையின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற காரணத்தாலேயே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன். உங்கள் கருத்தோடு நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன்.

இந்த வேலைத் திட்டத்தால் நம் தமிழினமே பெரும் அழிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளதை நன்றாக உணர்கிறேன். எனவே எந்தக் காலத்திலும் உங்கள் மகன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவை விட்டு வெளியேறிவிட்டதால், தனியொரு பெண் மகள் என்று தயங்காமல் உங்கள் கருத்துக்களைத் துணிவுடன் எடுத்துக்கூறுங்கள். பாஜகவை விமர்சிக்க திமுகவில் இருப்பது தடையாய் உள்ளது அதனால் நான் விலகி சுதந்திரமாக தனித்து நின்று விமர்சிப்பேன் என்ற உங்களது கொள்கை உறுதியை கண்டு வியக்கிறேன்.

seeman writes letter to subbulakshmi jagadeesan

உங்களைப் போன்ற தாய்மார்கள் இன்னும் இந்த மண்ணில் இருப்பதினால்தான் இன உணர்வும், மான உணர்வும் மங்காது மலர்கிறது.

இயக்கத்தில் இருந்தபோதும் தனித்த பேராற்றல் நீங்கள். தனித்து இருந்தாலும் மாபெரும் இயக்கம் நீங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்கள் உங்களைக் கொண்டாடக் காத்துள்ளார்கள்.

உங்களுடைய மகன் என்பதில் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். உங்களுடைய தன்மான உணர்வுக்கும், தமிழ் உணர்வுக்கும் நான் தலை வணங்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செல்வம்

சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை !

கிச்சன் கீர்த்தனா : மலாய் பேடா

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share