திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் மதிமுக (MDMK) பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) 32வது பொதுக்குழுக் கூட்டம் இன்று ஜூன் 27-ந் தேதி சென்னை அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ விஜயா மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் வெளியேறிய நிலையில் தற்போது மதிமுகவும் விலகுவதாக அறிவித்துள்ளது.
மதிமுக (MDMK) பொதுக் குழு தீர்மானம் விவரம்
திமுக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்துத்துவ மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில், வெறும் 47 இடங்களில் வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த இரகசியமே.
இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை கூட்டணி என்று பிரகடனம் செய்யப்பட்டதெல்லாம் பொருளற்றதாக ஆக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்கிறது.
தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
