தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. (Kanimozhi) 2 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் வேங்கட நாராயணா. அவரது இந்த நியமனத்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுகவின் கனிமொழி எம்.பி தமது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.
- தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
- மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?” என பதிவிட்டுள்ளார்.
