காலையில் பேப்பர் படித்தால் மட்டும் போதாது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து விவசாயிகளுடன் நேரடியாகக் கலந்துபேசி அவர்களின் உண்மையான கோரிக்கைகளை நீங்கள் தயவு செய்து கேட்டறிய வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்யை உதய நிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 7) மேகதாது அணை விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய், “குறுவை சாகுபடிக்கான நிவாரணம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் என்றாலே நாங்கதான் என்று பேசுபவர்கள் பத்திரிகைகளைச் சரியாகப் படித்தாலே நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார்
இதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அரசு தரப்பில் வழங்கப்பட்ட ரூ.134 கோடி என்பது வழக்கமான ‘சிறப்புத் தொகுப்பு’ (Special Package) மட்டுமே தவிர, அது வறட்சி நிவாரணம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, சிறப்புத் தொகுப்பிற்கும் வறட்சி நிவாரண நிதிக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும் .
இது வெறும் “காலையில் பேப்பர் படித்தால் மட்டும் போதாது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து விவசாயிகளுடன் நேரடியாகக் கலந்துபேசி அவர்களின் உண்மையான கோரிக்கைகளை நீங்கள் தயவு செய்து கேட்டறிய வேண்டும். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவர்களது கோரிக்கைகைளை தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறார்கள். அண்டை மாநிலத்தைப் போல இங்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு தவெக அரசுக்கு என்ன பயம்? என்ன தயக்கம்?” என்றார்.
மேலும் பேசிய அவர், தற்போது குறுவை சாகுபடி மட்டுமின்றி, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களை ‘வறட்சி பாதித்த மாவட்டங்களாக’ உடனடியாக அறிவிக்க வேண்டும். அதற்கான உரிய நிவாரணங்களை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அதையும் இந்த அரசு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
