மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதா மீதான திமுகவின் நிலை என்ன என்று சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக கேள்வி கேட்டார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விளக்கமான பதிலளித்தார்.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி நடந்த தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவாதம்:
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சினை ஒன்று இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களுக்கான பிரச்சினை.
அதற்காகத்தான் நாளைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறோம். நாளைக்கு இந்த தென்மாநில பிரச்சினை, தமிழ்நாட்டுடைய பிரச்சினை, டிலிமிடேஷன் பற்றிய கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் கலந்துக்க போறாங்களா இல்லையா? நம்பர் ஒன் கொஸ்டின்…
(எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கிட: நான் கேட்டு முடிச்சிறேன், நில்லுங்க நில்லுங்க, கேட்டு முடிச்சிறேன்…)
கொஞ்சம் கேட்டு முடிச்சிறேன். அதுக்கப்புறம், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசட்டும். ஒன்னும் பிரச்சனை இல்ல.
என்னுடைய கருத்துக்களை சொல்ல விடுங்க. ஜனநாயகப்பூர்வமா என்னுடைய கருத்துக்கள் சொல்லணும்ங்கிறதை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்ட்ட கேட்டுக்கிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பிரபோஷனேட் காப்பாற்றப்படணும், தென்மாநிலங்கள் காப்பாற்றப்படணும்ங்கிற ஒரே குறிக்கோளுடன் எம்.பி.க்களை கூப்பிட்டிருக்கிறார்.
அதில் டெல்லியிலிருந்து வந்த தகவல் என்னன்னா, இது ஒரு தகவல், இதை எதிர்க்கட்சித் தலைவர் சொல்லட்டும்.
வரக்கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துல, திமுக இந்த மசோதாவுக்கு சப்போர்ட் பண்ண போகுது, இல்ல வெளிநடப்பு பண்ண போகுது, அப்படின்னு ஒரு தகவல், ஒன்றிய அரசோடு சேர்ந்து பண்ண போறாங்கன்னு ஒரு தகவல் வருது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்லட்டும்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: நீங்கள் வந்து நாளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை டிலிமிடேஷன் பற்றி விவாதிப்பதற்கு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருக்கிறேன் என்கிறீர்கள்.
அதில் எதிர்க்கட்சித் தலைவருடைய திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்ளுமா இல்லையா என்பதை அறிய விரும்புகிறேன் என்பதுடன் நிறுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் குறிப்பிட்ட “வெளியில தகவல் கிடைச்சது” என்ற வார்த்தை நீக்கப்படுகிறது,
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: தொகுதி வரையறை மசோதா பற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக அதை முதன்முதலாக அந்த பிரச்சினையைப் பற்றி பேசியது திராவிட முன்னேற்றக் கழகம், எங்களுடைய தலைவர் அவர்கள்தான்.
சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 5 முதலமைச்சர்களையும் சென்னைக்கு வரவழைத்து ஒரு மிகப்பெரிய ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, இந்த டிலிமிடேஷனுக்கு எதிராக முதன்முதலாக இந்தியாவிலேயே குரல் கொடுத்த தலைவர் எங்களுடைய தலைவர்.
இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூப்பிட்டிருக்கிறீர்கள்.
இதற்கான சரியான முடிவை எங்களுடைய தலைவர் ஆலோசனை செய்து எடுப்பார்.
இப்ப நம்ம பேசிட்டு இருக்கிறது நிதிநிலைமை, வேளாண்மை பட்ஜெட்டை பற்றியது.
அதற்கு எங்களுடைய உறுப்பினர்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், அதற்கு முடிந்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள். இவ்வாறு உதயநிதி கூறினார்.
