12,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டைர் ஓநாய்களை மரபணு பொறியியல் மூலம் விஞ்ஞானிகள் உயிர்ப்பித்துள்ளனர். dire wolves brought back life after 12000 years
அறிவியல் உலகை ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்ற இரண்டு ஓநாய் குட்டிகளின் பெயர்கள் தான் தற்போது எங்கும் ஆக்கிரமித்துள்ளன.
அமெரிக்காவின் டெக்ஸாஸை தளமாகக் கொண்ட கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனம், பண்டைய டிஎன்ஏ, குளோனிங் மற்றும் மரபணு எடிட்டிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி, 12,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டைர் ஓநாய் குட்டிகளை மரபணு பொறியியல் மூலம் உருவாக்கியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பிறந்த இந்த இரண்டு ஆண் குட்டிகள் தற்போது ஆறு மாத கால வயதை அடைந்துள்ளன. கிட்டத்தட்ட நான்கு அடி உயரமும் 36 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் வளர்ந்துள்ளன.

டைர் ஓநாய் ஒரு காலத்தில் வட அமெரிக்காவில் சுற்றித் திரிந்த ஒரு சிறந்த வேட்டையாடும் விலங்கு ஆகும். அவை சாம்பல் நிற ஓநாய்களை விட அளவில் பெரியவை, சற்று அடர்த்தியான ரோமம் மற்றும் வலுவான தாடையைக் கொண்டவை.
இதுதொடர்பாக கோலோசல் இணை நிறுவனரும், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) இரண்டிலும் மரபியல் பேராசிரியருமான ஜார்ஜ் சர்ச் டைம் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், டைர் ஓநாயின் வகையை ஒத்துள்ள சாம்பல் ஓநாயின் டிஎன்ஏவைப் பயன்படுத்தினோம். மேலும், ஒரு குப்பி இரத்தக் குப்பியை எடுத்து, EPC-களை தனிமைப்படுத்தி, அவற்றை வளர்த்து, அவற்றிலிருந்து குளோன் செய்தோம். மேலும், அவை மிக உயர்ந்த குளோனிங் திறனைக் கொண்டுள்ளன. இது குளோனிங் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று தெரிவித்தார்.
கொலோசலின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பென் லாம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”எங்கள் குழு 12,000 ஆண்டுகள் பழமையான பல் மற்றும் 72,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டிலிருந்து டிஎன்ஏவை எடுத்து ஆரோக்கியமான மற்றும் கொடூர குணம் கொண்ட இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது. இது மரபணு பொறியியலில் ஒரு மிகப்பெரிய மைல்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஓநாய் குட்டிகள் தற்போது 10 அடி உயர வேலிகளால் சூழப்பட்ட, 2,000 ஏக்கர் கொண்ட இடத்தில் வாழ்கின்றன. அங்கு அவை பாதுகாப்புப் பணியாளர்கள், ட்ரோன்கள் மற்றும் நேரடி கேமராவினால் தொடர் கண்காணிப்பில் உள்ளன.
டைர் ஓநாயைத் தொடர்ந்து மாமத், டோடோ மற்றும் டாஸ்மேனிய புலி போன்ற அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கொலோசல் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
