திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் நீதித்துறைக்கு எதிரான எந்தவொரு கருத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் போலீசார் இதற்கு அனுமதி வழங்கவில்லை. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.
இதற்கிடையே தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அனைத்து மேல்முறையீடுகளையும் டிசம்பர் 12ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர்.
அப்போது ,நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தனிப்பட்ட சாதி அடிப்படையிலான தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ரிட் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர். வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‘ நீதித்துறையை இழிவுபடுத்த முடியாது. நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம், நீதித்துறையை இழிவுபடுத்த வேண்டாம்.
நாங்கள் ஓரளவு பொறுத்துக்கொள்ள முடியும். அது மீறினால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வெளிப்படையாக பதிலளிக்க முடியாது என்பதற்காக , அதைப் பயன்படுத்தி தொடர்ந்து தூண்டிவிடுவதையோ, விமர்சிப்பதையோ ஏற்க முடியாது.
நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதித்து, நீதித்துறை அமைப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம் . நீதிமன்றம் அனைவருக்குமான கடைசி புகலிடம்” என்று எச்சரிக்கும் தொனியில் கூறினர்.
ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
