ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வகையில் திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் இன்று (பிப்ரவரி 13) ஈரோடு தொகுதிக்கு வந்தார்.
வீரப்பன் பாளையம் பகுதிக்கு உட்பட்ட சிவகாமி செங்கோட்டையன் திருமண மஹால் அருகே அமைந்துள்ள திமுக பகுதி தேர்தல் அலுவலகத்தில் நடந்த பிப்ரவரி 13 மாலை 5 மணிக்கு உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி, எம்.பி. ஜெகத்ரட்சகன், அந்த பகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் மஸ்தான், ரிஷிவந்தியம் சட்டமனற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “இந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்கிறார்.
ஆனால் திமுகவினராகிய நாம் தோழமை உணர்வோடு இங்கே படையெடுத்து வந்திருக்கிறோம். தோழமைக்கு நாம் எப்போதும் தோள் கொடுப்போம்.
இங்கே பேசியபோது அமைச்சர் முத்துசாமி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
நான் எப்போதுமே இதுபோன்ற நிர்வாகிகளின் முன்கூட்டிய கணிப்பை கொஞ்சம் குறைத்து தான் மதிப்பிடுவேன்.
அந்த வகையில் நான் சொல்கிறேன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் உறுதியாக வெற்றி பெறுகிறோம்” என்று கூறிய துரைமுருகன் தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவை புகழ்ந்தார்.

“திருவண்ணாமலை காரர்களுக்கு இடைத்தேர்தல் புதிதல்ல. தமிழ்நாட்டில் முதன் முதலில் நடைபெற்ற இடைத்தேர்தல் திருவண்ணாமலையில் தான் 1963 ஆம் ஆண்டு நடைபெற்றது.
காமராஜர், ஆர். வெங்கட்ராமன், பக்தவச்சலம் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் அந்த இடைத்தேர்தலில் அப்போது திருவண்ணாமலை நகர மன்ற தலைவராக இருந்த சண்முகத்தை நிறுத்தினார் அண்ணா.
அந்த இடைத்தேர்தலில் அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் வேலை செய்து ப.உ. சண்முகத்தை வெற்றி பெற வைத்தனர்.
எனவே திருவண்ணாமலை காரர்களுக்கு இடைத்தேர்தல் பணியை சொல்லிக் கொடுப்பது என்பது மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக் கொடுப்பது போல் ஆகும்.
இந்த வகையில் அமைச்சர் வேலு காட்டும் திசையில் திமுக கூட்டணியின் வெற்றி தெரிகிறது” என்று கூறினார்.
–வேந்தன்
பிரபாகரனோடு களத்தில் நின்றவர்கள் சொல்வது என்ன?: வைகோ
