மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய் அளித்த வாக்குறுதி பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று ஜூன் 27-ந் தேதி நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் பேசிய வைகோ, ”எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் என முதல்வர் விஜய் என்னிடம் சொன்னார். ஆனால் நான் முடியாது என்று மறுத்தேன்.
அதற்கு, “நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.. அவர்களை வெற்றி பெற வைப்பது எனது கடமை” என முதல்வர் விஜய் என்னிடம் கூறினார். இதனையடுத்துதான் 2 எம்.எல்.ஏ.களிடம் ராஜினாமா பற்றி பேசினேன்.
சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் தாம் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டதாக அறிவித்தார்.
கடையநல்லூர் எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன், ராஜினாமா செய்தால் மீண்டும் ஜெயிக்க முடியாது என மறுத்துவிட்டார். மதிமுக எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறேன் என்றார். அதனை சுட்டிக்காட்டி இன்றைய பொதுக்குழுவில் அவரும் வரவில்லை” என்றார்.
இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஆமாம் விஜய் என்னிடம் சொன்னார்.. 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் அப்போது இடைத்தேர்தல் வரும்.. அந்த தேர்தல் வந்தால் நானே வந்து உங்களுக்கு பிரசாரம் செய்வேன் என்று விஜய் சொன்னார்” என்றார்.
அப்படியானால் விஜய் குதிரை பேரம் நடத்தினாரா என்ற கேள்விக்கு, “யார் குதிரை பேரம் நடத்தியது? இப்ப செந்தில் செல்வனை திமுக சேர்த்துள்ளதே.. இது குதிரை பேரமா? ஒட்டக பேரமா? எனவும் வைகோ கேட்டார்.
VIDEO:
