பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுகவினர் விமர்சித்தால் அவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டிய நிலை வரும் என்று பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் எச்சரித்துள்ளார்.
அதிமுக மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றோர் அண்ணாமலையை விமர்சித்திருந்தனர்.
இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணாமலை கருத்துக்களுக்கு எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பதில் சொல்வார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி விமர்சனம் செய்வதை அதிமுகவினர் நிறுத்தவில்லை என்றால்,
அவர்கள் மீதான ஊழல் வழக்கை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைப்போம் என்று மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிவோடு அதிமுகவை ஒன்றிணைத்து சட்டசபையில் 66 எம்.எல்.ஏக்கள் இடம் பெற வைத்தை தாங்கள் நன்றி மறந்துவிட்டீர்கள்.
திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி கட்சியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17 சதவிகித வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா.
ஆளும் கட்சிகள் செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து Dmk Files 1, Dmk Files 2 வெளியிட்டு ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தேடி எடுத்து எங்கள் தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும்.
மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
பாஜக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் 10 மாநகராட்சி மேயர் பதவியை தாங்கள் இழந்ததை மறந்து விட வேண்டாம்.
இனிவரும் காலங்களில் பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுகவினர் விமர்சனம் செய்தால்,
அவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை அண்ணாமலை ஒப்புதலுடன் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் வெளியிட்டாரா என்று அவரிடம் கேட்பதற்காக மின்னம்பலம் சார்பாக அவரை தொடர்பு கொண்டோம். அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.
செல்வம்
‘ஜெயிலர்’ எப்படி? ட்விட்டர் விமர்சனம்!
பேராசிரியர் அன்பழகன் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!
ஜெயிலர்: சிறை கைதிகள் வேடத்தில் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள்!
தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு: முத்தரசன் வேண்டுகோள்!