தமிழகம் முழுவதும் 100 நாட்கள் பயணம்… அன்புமணி அறிவிப்பு!

Published On:

| By Selvam

Anbumani

எனது மூச்சுக்காற்று நிற்கும் வரை அன்புமணிக்கு பாமக தலைவர் பதவியை வழங்கமாட்டேன். நானே தலைவராகவும், நிறுவனராகவும் செயல்படுவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (ஜூன் 13) தெரிவித்துள்ளார்.

ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் ஜூலை 25 தேதி முதல் தமிழகம் முழுவதும் 100 நாள்கள் அன்புமணி ராமதாஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும், பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,“அல்லவை செய்தொழுகும் வேந்து” என்று விமர்சிக்கப்பட்ட கொடுங்கோன்மையில் இருந்தும் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் திமுக ஆட்சியின் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் தான்.

ADVERTISEMENT

அவர்களைக் காப்பாற்றுவது தான் பொறுப்புள்ள அரசியல் கட்சியின் கடமை என பாமக கருதுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதை விட, நல்லாட்சி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தான் தமிழ்நாட்டு அரசு ஈடுபட்டிருக்கிறது.

ADVERTISEMENT

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதைப் போல தமிழகத்தில் நடைபெற்று வரும் விளம்பர மாடல் அரசால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பது தான் உண்மை.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!

சமூகநீதி என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அரசு தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 5-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்த பிறகும், மாநிலத்தில் சமூகநீதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கர்நாடகம் அறிவித்திருக்கிறது.

ஆனால், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அதன் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழக்கால் ஆபத்துக்குள்ளாகியிருக்கும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது, பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள் தொகை மற்றும் சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சமூகநீதிக் கடமைகளை குழி தோண்டி புதைக்கிறது திராவிட மாடல் அரசு.

பள்ளிக்கூடங்கள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரையிலும், சாலைகளில் தொடங்கி ஆலைகள் வரையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை அரசே காக்கும் அவலம் நிலவுகிறது.

உழவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை!

பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. கல்வி சேவையாக இருந்த நிலை மாறி கொள்ளையாக மாறி விட்டது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஒரு லட்சம் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குவதை கைவிட்டு விட்டது.

ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக அரசால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் ஒரே ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட கட்டப்படவில்லை. ஒரே ஒரு மருத்துவ மாணவர் சேர்க்கை இடம் கூட அதிகரிக்கப்படவில்லை.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை, இலவச மருத்துவ வார்டுகள் படிப்படியாக கட்டண வார்டுகளாக மாற்றப்பட்டு ஏழைகளின் மருத்துவம் பெறும் உரிமை பறிக்கப்படுகிறது.

உழவர்களுக்கு ஒன்றுமே செய்யப்படவில்லை. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களின் கொள்முதல் விலைகளை உயர்த்த மறுக்கும் அரசு, பாசன வசதிகளை செய்து தர தவறிவிட்டது.

பாமகவின் தலையாயக் கடமை!

உழவர்களின் நலன் காக்கும் அரசு என்று கூறிக்கொண்டே அவர்களின் விளைநிலங்களை பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் பாவத்தை அரசு செய்கிறது.

மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் தான் அனைத்து வகையான சமூகக் கேடுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று தெரிந்தும் கூட அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

படிப்படியாக மதுவிலக்கு என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் நாடகம் என்பதை உலகமே தெரிந்து வைத்திருக்கிறது. மக்களுக்கு பொதுச்சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

சுற்றுச்சூழல் சீரழிவு, போக்குவரத்து வசதி இல்லாமை, தூயக் காற்று கிடைக்காமை போன்றவற்றால் தமிழகம் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது.

கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் பின்தங்கிக் கிடக்கும் பகுதிகளை முன்னேற்றுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் தமிழகத்தின் ஒரு பகுதி வளராமல் முடங்கிக் கிடக்கிறது.

மொத்தத்தில் முன்னேற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த அவலங்கள் குறித்து மக்களிடம் விழிப்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும், மக்களிடமிருந்து மோசமான ஆட்சியால் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியதும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாமகவின் தலையாயக் கடமை ஆகும்.

உரிமை மீட்புப் பயணம்!

அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் பசுமைத் தாயகம் நாளான ஜூலை 25-ஆம் தேதி தொடங்கி, தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை மொத்தம் 100 நாள்கள் கால அளவில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது.

சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, மது – போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமைகளை வென்றெடுப்பது தான் அன்புமணி இராமதாஸ் மேற்கொள்ளவுள்ள பயணத்தின் நோக்கங்கள் ஆகும். விரிவான பயணத் திட்டம் அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும்.

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஓர் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கானது. எனவே. உன்னத நோக்கம் கொண்ட இந்தப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்கும்படி அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. anbumani Ramadoss announced 100 days yatra

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share