இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மூலம் காம்பியாவில் குழந்தைகள் உயிரிழந்திருப்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அவமானம் என்று இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு இந்தியாவில் தயாரான 4 இருமல் மருந்துகளுக்குத் தொடர்பு இருப்பதாகச் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான மருந்து நிறுவனம் ஹரியானாவில் உள்ள மைய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனம் ஆகும்.
இதுகுறித்து நேற்று (நவம்பர் 15) பெங்களூருவில் நடைபெற்ற இன்ஃபோசிஸ் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“இந்தியா கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரித்து நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடுவதில் சாதனையைப் படைத்தாலும் , அறிவியல் ஆராய்ச்சித் துறையில் நாடு பெரும் சவால்களை எதிர்கொள்கிறது” என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் கஸ்தூரி ரங்கன் பரிந்துரையின் படி புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது என்று தெரிவித்த அவர், “2020ல் அறிவிக்கப்பட்ட உலகப் பல்கலைக்கழக உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் இந்திய உயர்கல்வி நிறுவனம் ஒன்று கூட இல்லை.
அதுபோன்று கடந்த 70 ஆண்டுகளாக நம்மை ஆட்டிப்படைத்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுக்கு இன்னும் தடுப்பூசி தயாரிக்கவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தின் காரணமாக 66 காம்பியா குழந்தைகள் இறந்தது,
நம் நாட்டிற்கு நினைத்துப் பார்க்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆராய்ச்சித் துறையில் இந்தியா பின் தங்கியிருப்பதாகத் தெரிவித்த அவர், “உயர் கல்வி நிறுவனங்களில் போதிய நவீன ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வசதியும், போதிய நிதி உதவியும் கிடைப்பதில்லை.
இதுதான் நாம் ஆராய்ச்சித் துறைகளில் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அதுபோன்று பள்ளி மாணவர்களை மனப்பாடம் செய்ய வைக்காமல், அவர்களைக் கேள்வி கேட்கக் கற்றுத்தர வேண்டும். தற்கால பிரச்சினைக்கு தீர்வு காணச் சொல்லித் தர வேண்டும். இதுவே ஆராய்ச்சியில் நாம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறினார்.
பிரியா
உங்க கால்ல வந்து விழணுமா?: மோடியை சீண்டிய மம்தா
பிரியா மரணத்திற்கு காரணம்: அரசு மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்!
