தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட TAPS ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்துவோம் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளதற்கு தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், “TAPS வந்து, Can be implemented only when the fund, அந்த நிதி என்றது Government of India கிட்ட இருந்து அவங்க extra borrowing கொடுத்திருந்தாங்கன்னா, கண்டிப்பா நம்ம இம்ப்ளிமெண்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க.
அதுவரைக்கும் அந்த ரிட்டயர்மெண்ட் ஆனவங்க, 1-1-2026, அதுக்கப்புறம் on or after 1-1-2026 வரைக்கும், interim relief கொஞ்சம் கொடுக்கலாம்னு சொல்லிட்டு, interim pay out கொஞ்சம் ரெடி பண்ணி இருக்கிறோம். அதுக்குரிய சீக்கிரத்துல நம்ம அட்ரஸ் பண்ணுவோம்.
Once இந்த Government of India extra borrowing பண்றதுக்கு அலோவ் பண்ணாங்கன்னா, த்ரூ TAPS கம்பல்சரி நம்ம இம்ப்ளிமெண்ட் பண்ற வாய்ப்பு இருக்கு. அதுக்குரிய விரைவுல, in case, இந்த august house-ல நான் இன்பார்ம் பண்றது வந்து என்னன்னா, அக்ரி பண்ணிட்டாங்கன்னா, வரப்போற சப்ளிமெண்டரி பட்ஜெட்ல கண்டிப்பா இந்த TAPS-ஐ வந்து இம்ப்ளிமெண்ட் பண்ண கொஞ்சம் வாய்ப்பு இருக்கு” என கூறியிருந்தார்.

இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் நமது மின்னம்பலத்திடம் கூறுகையில், “ முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், “ திமுக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒழிக்கப்பட்டு அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான ‘பழைய ஓய்வூதியத் திட்டம்’ கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது முந்தைய திமுக ஆட்சியின் TAPS ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்துவோம் என நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டசபையில் தெரிவித்திருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை தவெக அரசு அமல்படுத்தும் என எதிர்பார்ப்பு காத்திருந்த லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை முதல்வர் விஜய்யின் அரசு ஏமாற்றிவிட்டதையே நிதி அமைச்சர் மரியவில்சனின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
தவெக தனது தேர்தல் அறிக்கையில் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், 5 ஏக்கருக்கு குறைவாக நில வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள்.
ஆனால், தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் 200 யூனிட் மின்சாரம் மற்றும் பயிர் கடன் ரத்து வாக்குறுதிகள் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலை உருவாகியுள்ளது
பொதுவாக மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தும் போது உயர் அலுவலர்கள் பல்வேறு தடைகளை உருவாக்குவார்கள். ஆட்சியாளர்கள் தான் மன உறுதியோடு தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக TAPS…ஐ அமல்படுத்துவதில் உயர் அலுவலர்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். TAPS திட்டம் மெல்ல கொல்லும் நஞ்சு என்பதுடன் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே என்பதே CPS ஒழிப்பு இயக்கத்தின் நிலைபாடு
ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டிஸ்கர், இமாச்சல் மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது போன்று தமிழக முதலமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வரை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
