தமிழ்நாட்டில் மோசடிகளுக்காக தங்களது வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டவர்கள் (Mule Bank Accounts), இடைத்தரகர்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 837 பேர் சைபர் கிரைம் போலீசாரால் 48 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பல பகுதிகளில் ரூ.545.27 கோடி மோசடி தொடர்பாக தேசிய சைபர் கிரைம் பதிவேடு உள்ளிட்டவற்றில் பதிவான 9,804 புகார்களின் அடிப்படையில் சைபர் குற்றங்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டன.
இதனடிப்படையில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 48 மணி நேரம் மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 837 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைபர் மோசடி மூலம் பெறப்படும் பணத்தைப் பெறவும், மாற்றவும், மறைக்கவும் மற்றும் திரும்பப் பெறவும் வங்கி கணக்குகளை தவறாகப் பயன்படுத்த உதவிடும் நபர்களைக் கண்டறிவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.

சைபர் குற்ற வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 601 எஃப்.ஐ.ஆர்-கள் தவிர, வங்கி கணக்குகளின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் புதிதாக 157 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையின் போது,
- 204 செல்போன்கள்
- 185 சிம் கார்டுகள்
- 4 கணினிகள்
- 1 பென் டிரைவ்
- 114 வங்கி பாஸ்புக்
- 29 செக் புக்
- 73 ஏடிஎம் / டெபிட் கார்டுகள்
- 1 கிரெடிட் கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கமிஷன் அல்லது வாடகை பணத்துக்கு ஆசைப்பட்டு வங்கி கணக்கு விவரங்களை மற்றவர்களிடம் பகிர்வது சைபர் குற்றங்களுக்கு உடந்தையாகும்.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யவும். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
