பழனி அருகே கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான நிலம், தனிநபர் ஒருவருக்கு வெறும் ரூ.9 லட்சத்திற்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பிட்ட அந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்யக் கூடாது எனத் திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சார்பதிவாளருக்கு முன்னதாகவே அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், அந்தத் தடையையும் மீறி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் கடந்த ஜூலை மாதம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி வழக்கு குறித்து சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு கோயில் நில மோசடிப் புகாரில் அதே சார் பதிவாளர் சிக்கி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
