நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரி சென்னையில் நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் 9-ம் நாளாக பட்டினிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகவும் நியாயமான நீட் தேர்வுக்காகவும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நீட் தேர்வையே ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 9 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் இந்தப் போராடத்துக்கு பல்வேறு இயக்கத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திய 4 பேர் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இன்று மாலை இப்போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் பெருந்திரளாக திரண்டு மனித சங்கிலிப் போராட்டமும் நடத்தினர்.
