அமலாக்கத்துறை இயக்குநர் (Enforcement Directorate ED) ராகுல் நவீன் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் இயக்குநரான ராகுல் நவீன் பதவிக் காலம் ஆகஸ்ட் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமன குழு (The Appointments Committee of the Cabinet), ராகுல் நவீன் பதவி காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

இதனையடுத்து ராகுல் நவீன் பதவி காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 13-ந் தேதி முடிவடைகிறது. ராகுல் நவீன், அடுத்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி ஓய்வு பெற்றாலும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை பணியில் நீடிப்பார்.

யார் இவர்?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் நவீன். கான்பூர் ஐஐடியில் பிடெக் பட்டம் பெற்றார். பின்னர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் Swinburne University of Technology-ல் எம்பிஏ பட்டம் பெற்றார்.
1993-ம் ஆண்டு ஐஆர்எஸ் கேடர் அதிகாரி. வருமான வரித்துறை அதிகாரியான ராகுல் நவீன் 2019-ல் இருந்து அமலாக்கத்துறையில் பணியாற்றுகிறார்.
அமலாக்கத்துறை சிறப்பு அதிகாரியாகவும் 2020-ல் அமலாக்கத்துறை சிறப்பு இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார் ராகுல் நவீன்.
2023-ம் ஆண்டு அமலாக்கத்துறையின் பொறுப்பு இயக்குநராகவும் 2024-ம் ஆகஸ்ட் 14-ந் தேதி அமலாக்கத்துறையின் புதிய இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். இப்பதவிக் காலம் 2 ஆண்டுகள்.
அதேநேரத்தில் ஓராண்டு பணி நீட்டிப்பு என்பது 3 முறை வழங்கப்படலாம் என்பது விதி. இதன்படி தற்போது ராகுல் நவீனுக்கு முதல் முறையாக ஓராண்டுகால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நவீனின் பதவிக் காலத்தில் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம் IPAC, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு எதிராகவும் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
