போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து பணியாளர்கள்!

Published On:

| By Selvam

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ADVERTISEMENT

இவர்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு அமல் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அதில் இழுபறி ஏற்பட்டு வந்தது.

ADVERTISEMENT
tamil nadu transport workers strike

இதற்கிடையே ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பலன்கள், மருத்துவ காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் போக்குவரத்து தொழிலாளர்கள் கூறி வருகிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 325 பணி மனைகளிலும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில், சேலத்தில், தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு மாநில பொன்விழா மாநாடு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.

சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் பணியாற்றும் சூழல் உள்ளது. எனவே, சோதனைச் சாவடிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

வெளிநபர்கள் பொய்யான புகார்களை கூறி ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் தொடர்பான கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய உத்தரவுகள் வழங்கி அவர்களின் துயர் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் திருச்சியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

ராஜ்

’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவின் கிளிக்ஸ்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share