கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளிக்கு முன் அல்லது பின் திறக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புறநகர் போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
88 ஏக்கரில் 393 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
தென் மாநிலங்களுக்கு செல்லும் சுமார் 80% அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.
ஆனால் கிளாம்பாக்கத்துக்கு செல்ல நகர பேருந்து வசதி மட்டுமே உள்ளது. இந்த பேருந்துகளில் எப்போதும் அதிகளவிலான கூட்டம் இருந்து வருகிறது. விழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், போக்குவரத்தை எளிமை படுத்தவும் கிளாம்பக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வண்டலூர் ரயில் நிலையத்தை அடுத்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2024 ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொடங்கியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஆகாய நடை மேம்பாலமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், “மூன்று நடைமேடைகளுடன் ரயில் நிலையம் கட்டும் பணி நிறைவடைந்து இருக்கிறது. தண்டவாள பணிகளும் நிறைவடைந்து விட்டது.
தற்போது ஆகாய நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவும் 30 சதவீத பணி நிறைவடைந்து விட்டது. இதை மாநில அரசு செய்து வருகிறது.
வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னரோ அல்லது பின்னரோ இந்த ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
ரயில் நிலையம் திறந்த பின்னர் அதை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்
