கோவையில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கழிவறையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். SCoimbatore PSG Medical College
கோவை பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள் பலவற்றில் இருந்தும் வந்து மாணவர்கள் இங்கு தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் பகுதியை சேர்ந்த 28 வயது மாணவி பவபூரணி கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி மயக்கவியல் துறையில் முதுகலை பயின்று வந்தார்.
மாணவி பவபூரணி, விடுதி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றதாகவும், நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பவபூரணியின் அறையில் தங்கி இருந்த மாணவிகள் கழிவறைக்கு சென்று கதவை தட்டியதாக கூறப்படுகிறது. பலமுறை தட்டியும் கதவை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்று கழிவறை கதவை உடைத்து பார்த்த போது அங்கு அந்த மாணவி சடலமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பவபூரணியின் இறப்பு குறித்து, அவரது தந்தை கந்தசாமி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தை நம்ப முடியவில்லை. எனது மகளின் அறையில் இருந்த பொருட்கள், சி.சி. டி. வி கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும். உடனிருந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தி, எனது மகளின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்” என வலிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறையினர், “அந்த மாணவி எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளனர்.
