இலங்கையில் டிட்வா புயல் கோரத்தாண்டவத்தால் பலியானோர் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாண கடற்பரப்பில் உருவான டிட்வா புயல், வடமாகாண நிலப்பரப்பின் ஊடாக மீண்டும் கடலுக்குள் இறங்கி தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. வரலாறு காணாத புயலின் இந்த நகர்வால் இலங்கை முழுவதும் பெரும் கனமழை, வெள்ளம் ஏற்பட்டது.
இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் டிட்வா புயல் மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. டிட்வா புயலால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 366 பேரின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை.
இதனிடையே பேரழிவின் பிடியில் சிக்கிய இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டிய அனைத்து உலக நாடுகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அநுர குமார திசநாயக்க அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ தற்போதைய நிலைமையை துரிதமாக சீரமைப்பதற்கு இந்தியா உதவி அளித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, இந்த கடினமான வேளையில் இலங்கை மற்றும் அதன் மக்களுடன் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், மீட்பு மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்காக சாகர் பந்து செயற்பாட்டின் கீழ் தொடர்ந்து உதவி அளிப்பதற்கும், இலங்கையின் மீள்கட்டமைப்பில் தேவையான அனைத்து ஆதரவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முதலில், இந்திய INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி ஆகிய கடற்படைக் கப்பல்கள் மூலம் நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதோடு தொடர்ந்து உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ பாகிஸ்தானும் தனது ஆதரவை வழங்கி வருவதோடு தமது கடற்படையின் PNS SAIF கப்பல் ஊடாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
