அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதில் ரூ. 800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் கூறி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன.
பின்னர் சென்னை, கோவை என 2021, 2022ஆம் ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனுக்களை ஒற்றை நீதிபதி அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும்,
வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடிய ராஜு என்பவர் ஆஜராகக் கூடாது என்றும் தமிழக அரசு சார்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அமர்வே விசாரிக்கலாம் என்றும், மத்திய அரசு வழங்கிய அனுமதி திரும்பப் பெறப்படாததால் வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்து இருந்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார்.
அதன்படி வழக்கு இன்று(செப்டம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக பொறுப்பு தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
அதற்கு எஸ்.பி வேலுமணி தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜராகி ,முதல் அமர்வு அல்லது இரண்டாவது அமர்வு விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினர்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அமர்வில் முறையீடுமாறு உத்தரவிட்டனர்.
அதன்படி எம்.பி., எம்.எல்.ஏக்களின் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பிரகாஷ், டீக்காராமன் அமர்வு தான் இனி எஸ்.பி.வேலுமணி வழக்குகளை விசாரிக்க இருக்கிறது.
கலை.ரா
