Gen Z திமுக (DMK) ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்ய முயற்சித்த சம்பவம் சர்ச்சையாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் Gen Z திமுக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொண்டிருப்பவர் அன்பானந்தன் அரியப்பன்.
அன்பாந்தனை கைது செய்வதற்காக கிருஷ்ணகிரி அருகே உள்ள அவரது வீட்டுக்கு நள்ளிரவில் போலீசார் சென்றனர். அப்போது அன்பானந்தன் வீட்டில் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்பானந்தன் குடும்பத்தினரை போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். கனிமொழி தமது எக்ஸ் பக்கத்தில், “ தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
