இமாம் அலியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த இமாம் அலி, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் இணைந்து தமிழகத்தில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
அல்கொய்தா அமைப்பினரிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்பட்ட இமாம் அலி, மதுரை நெல்பேட்டையை மையமாக வைத்து அல் முஜாகிதீன் எனும் தீவிரவாதக் குழுவையும் உருவாக்கியிருந்தார்.
1992ம் ஆண்டுதான் அவரது பெயர் பெரிய அளவில் தமிழகத்தில் பேசப்பட்டது.
மதுரை அருகே உள்ள திருவாதவூர் என்ற பகுதியில் மலைகளில் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் சோதனைகளில் அவர் ஈடுபட்டிருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.
அதற்குப் பிறகு அவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். பின்னர் 1993ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் இயங்கிவந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் பலியானார்கள்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இமாம் அலி முக்கிய பங்கு வகித்தார். இதைத் தொடர்ந்து 1998ம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று கோவையில் பல இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இந்த பயங்கர தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இமாம் அலி அமைப்புக்கு தொடர்பிருந்தது.
இப்படி, பல வழக்குகளில் தொடர்புடைய இமாம் அலியை, கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, நீதிமன்ற விசாரணைக்காக போலீசார் பாளையங்கோட்டை சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
அவருடன் அவரது கூட்டாளி ஹைதர் அலியும் இருந்தார். அப்போது மற்றொரு வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று
வெடிகுண்டுகளை வீசி இமாம் அலியை மதுரை திருமங்கலம் போலீஸ் நிலைய வளாகத்தில் மீட்டுச் சென்றது.

இமாம் அலியுடன் சேர்ந்து தப்பித்த ஹைதர் அலி பிடிபட்ட நிலையில், இமாம் அலி தேடப்பட்டுவந்தார்.
இமாம் அலியைப் பிடிக்க சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் திருவனந்தபுரம், பெங்களூர் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் விசாரணை நடத்தினர்.
இமாம் அலி கூட்டாளிகள் பெங்களூருவில் தங்கியிருப்பது தெரியவந்தது. அப்போது (2002 செப்டம்பர் 29) நடைபெற்ற தாக்குதலின்போது இமாம் அலி உட்பட ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, இமாம் அலியை காட்டிக் கொடுத்தவர்களையும் என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்திய போலீஸ் அதிகாரிகளையும் பழி தீர்க்க,
தீவிரவாதிகளின் புதிய அமைப்பு திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்காக அந்த இமாம் அலியை கொன்ற சிறப்பு தனிப்படை போலீசாருக்கு கொஞ்ச நாட்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இமாம் அலியின் நினைவு தினம் வரும் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது.
அவருடைய நினைவாக, தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மாவட்ட பெருநகரங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.