மேகதாது அணை பிரச்சனைக்கு புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரும் தமிழக சட்டமன்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) ஆதரவு தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசின் சட்டசபை தீர்மானத்தில், “மேகதாது அணை விவகாரத்துக்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில், ஜூன் 27-ந் தேதி தமிழக சட்டமன்ற நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என காவிரி மீட்பு உரிமைக் குழுவின் தலைவர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நகல் எரிப்பு போராட்டம்- சீமான் ஆதரவு
சீமான் இன்று ஜூன் 23-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
