இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. Shubman Gill is an India’s new Test captain
இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் விராட் கோலி இருவரும் ஓய்வுபெற்ற நிலையில், டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மற்றும் கேப்டன் ஆகியோர் பிசிசிஐ தேர்வுக் கமிட்டிக் குழு இன்று வெளியிட்டது.
அதன்படி பலரும் எதிர்பார்த்தபடியே இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில்லுக்கு தற்போது 25 ஆண்டுகள் 258 நாட்கள் வயதாகிறது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்ற ஐந்தாவது இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக மன்சூர் அலி கான் பட்டோடி (21 ஆண்டுகள் 77 நாட்கள்), சச்சின் டெண்டுல்கர் (23 ஆண்டுகள் 169 நாட்கள்), கபில் தேவ் (24 ஆண்டுகள் 48 நாட்கள்), மற்றும் ரவி சாஸ்திரி (25 ஆண்டுகள் 229 நாட்கள்) ஆகியோர் தங்கள் இளம் வயதில் கேப்டனாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அணியில், உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் சுதர்சன், கருண் நாயர், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று சர்வதேச டெஸ்ட் போட்டியில் சிறப்பான தங்கள் பணியை செய்து வரும் மூத்த வீரர்களான கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி விவரம்!
சுப்மன் கில் (கேப்டன் ), ரிஷப் பந்த் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி,
ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
