திமுக அரசை விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரவீன் சக்கரவர்த்தியின் திமுக அரசு மீதான விமர்சனம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு செல்வப்பெருந்தகை அளித்த பதில்: உத்தரப்பிரதேசத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பீட்டு பேசுவது ஏற்க முடியாது; உத்தரப்பிரதேசம் புல்டோசர் ஆட்சி. ஏழை எளிய மக்களை புல்டோசர் கொண்டு இடிப்பது உ.பி. யோகி ஆட்சி. அப்படி யோகியின் குரலாக பிரவீன் சக்கரவர்த்தி பேசுகிறாரா? எந்த விதத்தில் நியாயம் இது?
உத்தரப்பிரதேசத்தின் புள்ளி விவரம் என பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது உண்மையானதா? அது தவறு.
அதை நான் மறுக்கிறேன். பிரவீன் சக்கரவர்த்தி சொல்லி புள்ளி விவரம் தவறு.
அதிமுக அரசு வைத்திருந்த கடன் சதவீதம் 4.6. அதை 3 சதவீதமாக குறைத்தது திமுக அரசு. இதுதான் மேன்மையான ஆட்சி. இதுதானே மக்களின் ஆட்சி.. இதை ஏன் சொல்ல மனம் இல்லை?
நான்கரை ஆண்டுகளாக இன்னும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து கொண்டுதானே இருக்கு.. இந்த நான்கரை ஆண்டுகள் மட்டுமல்ல.. 4 தேர்தல்களிலும் வெற்றிக் கூட்டணியாக திமுக- காங்கிரஸ் கூட்டணி உள்ளது.
திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.. ஒரே நாளில் பேச்சுவார்த்தை முடியாது. எங்களுடைய கருத்தை நாங்கள் சொல்வோம்.. அவங்களுடைய கருத்தை அவங்க சொல்வாங்க.. சுமூகமாக பேசித் தீர்க்கனும்.
எப்பவுமே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு செய்யும்.. இங்கே ஒரு ஸ்பெக்குலேசன்.. இங்கே போகப் போறாங்க.. அங்கே போகப் போறாங்க.. அது காங்கிரஸின் பாரம்பரியம் இல்லை.
காங்கிரஸின் பாரம்பரியத்தையும் வரலாறையும் தெரியாதவர்கள், மறைமுகமான செய்திகளை தாம் வளர, தம்முடைய புகழை வளர்த்துக் கொள்ள இப்படி பேசுகின்றனர். இது முதலும் கடைசியாக இருக்கட்டும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன சொல்கிறதோ அதுதான் காங்கிரஸின் கருத்து. ஊடகங்களும், யாரோ வர்றாங்க.. போறாங்கன்னு பெரிதுபடுத்த வேண்டாம். ஆர்.எஸ்.எஸ், பாஜக மறைமுகமாக ஊடுருவி வேலைபார்க்கின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது; வலிமையாக இருக்கிறது. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது; இந்த பேச்சுவார்த்தை கூடிய விரைவில் சுமூகமாக முடிவுக்கு வரும்..
ஆட்சியில் பங்கு என்கிற விருப்பத்தை தெரிவிப்பது தவறு இல்லை. திமுக கூட்டணியை இந்தியா கூட்டணியை சிதைச்சுடலாம்னு அண்ணாமலையும் பாஜகவும் காணுகிற கனவுக்கு எங்க ஆளுங்க ‘தற்குறிகள்’ இரையாகிடுறாங்க..
பிரவீன் சக்கரவர்த்தி மீது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புகார் தெரிவித்துள்ளேன். பாஜகவை ஆதரித்து பேசுபவர்கள், இங்கே ஒன்றிரண்டு பேர் இருக்கின்றனர். அவர்களைக் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
