அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, அது JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும் என விஜய்யை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
வாக்குச்சீட்டு முறை வேண்டும்!
மதுரையில் இன்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்களை சந்தித்த சீமான் அளித்த பேட்டியில், “வாக்கு திருட்டு என இப்போது ஆதாரத்துடன் பேசி வருகிறார்கள். ஈரோட்டில் கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கான வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை. தேர்தல் ஆணையம் மட்டுமின்றி இந்த தேர்தல் முறையே மொத்தமும் தவறாக உள்ளது. ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட எந்த வளர்ச்சியடைந்த நாட்டில் இதுபோன்று வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது? வாக்கு இயந்திரத்தை தூக்கிப் போட்டுவிட்டு, வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்.
என் கட்சியினர் என்னை விட்டு விலகி விடுவார்கள்!
நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடுவோம். அதிமுக, பாஜக என எத்தனையோ தடவை என்னை வலியுறுத்தி கூப்பிட்டனர். ஆனால் எங்களது கொள்கைக்காக நான் செல்லவில்லை. தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை. நாங்கள் வீழ்ந்தாலும், எங்கள் இனம் வாழ்ந்தால் போதும் என்பது தான் எங்களது கொள்கை. இப்போது நான் தோற்பதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. நான் கூட்டணி வைத்தேன் என்றால், என் கட்சியினர் என்னை விட்டு விலகி விடுவார்கள். அப்படி கூட்டணி வைத்து போன கட்சியினர் அப்படி என்ன செய்து விட்டார்கள்? சட்டமன்றம் சென்று வெறுமனே மேஜையை தட்டுவதற்கு பதில் வீட்டில் சாணியை தட்டிவிட்டு போய்விடலாம்.
கட்சி அலுவலகங்கள் கல்யாண மண்டபமாக மாறுவதில் என்ன சீர்த்திருத்தம் இருக்கிறது? அதே பாஜக அலுவலகத்தில் ஒரு இந்து பெண்ணுக்கும், முஸ்லீம் பையனுக்கும் கல்யாணம் செய்து வைப்பார்களா?
திருச்சியில் நாதக மாநாடு!
கூட்டத்தை பார்த்து எடைபோடாதீர்கள். திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. அப்போது யார் கூட்டம் அதிகமாக இருக்கிறது என பார்த்துக்கொள்ளுங்கள். மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்திய பெருநிலத்திற்கே தெரியும்படி வரும் பிப்ரவரி 7ஆம் தேதி நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள். ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பாருங்கள்.
மறைந்த தலைவர்களை பற்றி பேசுவதால் மட்டும் வாக்குகள் கிடைத்துவிடாது. அந்த தலைவர்களின் வாக்குகள், அந்த கட்சிக்கு கிடைக்கும்.
அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?
தவெக மாநாட்டில் ஏற்பட்ட மரணத்தை, ஒரு கட்சி சம்பந்தப்பட்ட மரணம் என்று தனியாக பார்க்க முடியாது. துயரம் எங்கு நடந்தாலும் துயரம் தானே? நானே நேரில் சென்று பார்க்க வேண்டும். பைபளில் விருந்துக்கு போகவில்லை என்றாலும், துயரத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என சொல்கிறது. அது மனித மாண்பு.
விஜய் பவுன்சர்கள் குறித்து நான் பேசவில்லை. அது அவரவர் விருப்பம். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. மக்களை காக்க வந்த உங்களுக்கு எதற்கு பாதுகாப்பு என்பது தான் என் கேள்வி. ஓட்டுக் கேட்கும்போது இந்த பவுன்சர்கள் வருவார்களா?
அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். அதிமுக யார் கையில் இருக்கிறது என்பதை இப்போது கேட்கும் விஜய் அதிமுக ஆட்சியில் இருக்கும் போது ஏன் கேட்கவில்லை. கடந்த மாநாட்டில் CM சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார்?
