சேலம் திருமணிமுத்தாற்றில் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீரை திறந்துவிடும் 51 சாய பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
சேலம் திருமணிமுத்தாற்றில் சாயக் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .
அதன் ஒரு பகுதியாக கடந்த 10 தினங்களாக சேலம் மாவட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
நித்திய லட்சுமி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் சேலம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் 51 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலும், உரிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமலும் கழிவு நீரை வெளியேற்றிய காரணத்திற்காக இந்த 51 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறாத சாயப்பட்டறைக்கு இடம் வாடகைக்கு அளித்தால் அந்த உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும். அந்த உரிமையாளரிடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீடு தொகை வசூலிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த திருமணிமுத்தாறை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
