மழைநீர் கால்வாயில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை!

Published On:

| By Monisha

சிவகங்கையில் பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையை மழை நீர் கால்வாயில் வீசி சென்ற குழந்தையின் தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கையில் மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு போலீஸ் அதிகாரிகள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், மானாமதுரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், பெண் போலீஸ் ராதிகா ஆகியோர் இன்று (அக்டோபர் 23) காலை மானாமதுரை பை-பாஸ் சாலை அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள கல்லறைத் தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய் சிமெண்ட் சிலாப்பு பகுதியிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஆனால் அங்கு வேறு யாரும் இல்லை.

இதனால் அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று காவலர்கள் தேடிய போது மழைநீர் கால்வாயில் தண்ணீர் இல்லாத பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தனியாகக் கிடந்துள்ளது.

அந்த குழந்தையை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அக்குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் போலீசார் மழைநீர் கால்வாயில் குழந்தையை வீசிவிட்டுச் சென்றது யார்? தாயே குழந்தையை அங்கு வீசிவிட்டுச் சென்றாரா? அல்லது வேறு யாரேனும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து கால்வாயில் வைத்துவிட்டுச் சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லறைத் தோட்டம் பகுதியில் கால்வாயில் பச்சிளம் பெண் குழந்தையைப் போட்டுச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோனிஷா

வெடித்து சிதறிய கார்: விபத்தா? சதியா?

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share