இரட்டை இலை சின்னம் கோரியும், இடைக்கால பொதுச் செயலாளராகத் தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இடையிட்டு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தேர்தல் ஆணையம் இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு நாளைக்கு விசாரணைக்கு வரும் நிலையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அதிமுக பிரதிநிதி என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய உரிமை இல்லை. பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக்கூடாது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு விட்ட நிலையில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
