தாய்மை என்கிற சொல்லைச் சொன்ன உடன் நமக்கு ஏற்படும் உணர்வுகள் , அன்பு, பொறுமை, அக்கறை , பொறுப்பு போன்றவைதான். ஆனால், தாய்மை என்கிற உணர்வின் தொடக்கமே பத்து மாத கால போராட்டம் தான். தன் கனவுகளின் விளைச்சலான அவ்வுயிரை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த அவ்வளவு கால போராட்டம் தேவைப்படுகிறது.
ஆனால், இப்போது நாம் பார்க்கவிருக்கும் தாயின் போராட்ட காலம் பத்து மாதம் மட்டும் அல்ல. அதோடு சேர்த்து மொத்தம் 382 மாதங்கள். ஆம் , அற்புதம்மாள்!. கடந்த இரண்டு தலைமுறைகளின் செய்தித் தாள் வாசிப்புகளில் தொடர்ந்து வந்த ஒரு பெயர்.
நாம் வாழ்ந்த காலத்தில் கண்ட ஒரு தாயின் வெற்றிப் போராட்டத்தின் சின்னம் தான் அற்புதம்மாள். கடந்த அன்னையர் தினத்தை முன்னிட்டு அவரை சந்தித்து பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. பேட்டியில் பல எதிர்பாராத ஆச்சரியங்களை அவருக்கு அளிக்க திட்டமிட்டபடி அவரைக் காண நம் குழுவுடன் சென்றோம்.
உங்க வாழ்க்கையில 31 வருடங்கள் கடும் போராட்டங்களா தான் இருந்துருக்கு. இந்த போராட்டங்கள்ல ஒவ்வொரு முறை நீங்க வீழ்ச்சி அடையும் போதெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை தந்தது எது?
எனக்கு இத்தனை நாளா நம்பிக்கை தந்தது தாய்மைங்கிற ஒரு உந்து சக்தி தான்னு நினைக்கிறேன். நான் பெரியார படிச்ச ஒரு பெண்மணி. அதுனால விடாமுயற்சியா இருந்தா நிச்சயம் அதுக்கு பலன் உண்டுன்னு நம்புனேன். எத்தனையோ விதத்துல ஏமாற்றப்பட்டேன். ஆனா, ‘ அடுத்த தடவ சரி வரும் ‘ – ன்னு எப்பவுமே என் பையன் சொல்ற வார்த்தை என் காதுல ஒலிச்சிக்கிட்டே இருக்கும். தப்பே செய்யாத என் பையன யார் யாரோ தண்டிக்கிறாங்க. அதை நானும் ஏன் வேடிக்கை பார்க்கணும்னு ஒரு தாயா தோணுச்சு. அந்த தாய்மைக்கு ஒரு சக்தி இருக்கிறதா நான் நம்புறேன்.
பையனுக்காக ஒரு பெரும் போராட்டத்தை இத்தனை ஆண்டுகளா நடத்தி இருக்கீங்க. இத்தனை ஆண்டுகள்ல உங்க குடும்பத்தை எப்படி சமாளிச்சீங்க?
பொதுவாக வயசு பொண்ணுங்க வீட்ல இருந்தா ஒரு அம்மாவுக்கு எவ்வளவு பயம் இருக்குமோ, அது போன்ற எல்லா பயமும் எனக்கும் இருந்துச்சு. ஒரு கொள்கை பிடிப்பு உள்ள ஒரு நபர், என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க கேட்டுட்டு இருந்தப்போ தான் என் பையன கைது பண்ணாங்க.
ஆனா, அதை எல்லாம் பொருட்படுத்தாம என் பொண்ண அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனா, அறிவு( பேரறிவாளன்) இல்லாம அந்த திருமணத்தை நடத்த எங்களுக்கு இஷ்டம் இல்ல. அறிவு அப்போ செங்கல்பட்டு சிறையில் இருந்தான். அப்போ அவன் கிட்ட இந்த செய்திய சொன்னோம். ‘ எனக்காக நிறுத்தாதீங்க மா. நிறைய புகைப்படம் எடுங்க, வீடியோ எடுங்க, நான் வெளிய வரப்போ பார்த்துக்கிறேன் ‘ – ன்னு சொன்னான். அதுல இருந்து இப்போ வரை என் குடும்பம் அமைதியா இருக்கு.
உங்களோட போராட்டத்துல முதல் ஆளா உதவி பண்ணது யார்?
யாருமே முதல வந்து உதவி பண்ணல. எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க கூட அப்போ என்ன புறக்கணிச்சாங்க. நிறைய அவமானங்கள் ( குரல் நடுங்க..) அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது. எனக்கு, என் பிள்ள விடுதலை தான் தேவை. அதைத் தவிர்த்து மத்த எதைப் பத்தியும் நான் நின்னு யோசிக்கிறதுக்கு கூட எனக்கு நேரம் இல்ல.
நீங்க உதவி கேட்டு யாராவது மறுத்திருக்காங்களா?
நான் உதவி கேட்காத ஆளே கிடையாது. என்ன புறக்கணிச்சவங்க கிட்ட கூட நான் உதவி கேட்ருக்கேன். எங்க கிட்ட விசாரணைன்னு கேட்டு தான் கூட்டிட்டு போனாங்க. ஆனா எல்லாரும் சேர்ந்தா தான் இப்போ அவன கூட்டிட்டு வர முடியும்ன்னு தான் நான் பல தடவ சொல்லிருக்கேன். அதுனால எல்லா உதவியும் எனக்கு அப்போ தேவை.
பேரறிவாளன் அவர்களோட இத்தனை ஆண்டு சிறைவாசத்துல அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரோட நிதானம் தான். இந்த நிதானம் அவருக்குள்ள சின்ன வயசுல இருந்தே இருக்கா? இல்ல சேட்டை பண்ணுவாரா?
அவன் எப்பையுமே நிதானமா இருப்பான். நான் கூப்பிட, கூப்பிட வராம இருந்தா கோபத்துல ஜெல்லி கரண்டிய தூக்கி எறிவேன். பின் நாள் ல சிறையில் இருக்குறப்போ ‘ அந்த ஆயுதம் இன்னும் இருக்கா?’ – ன்னு கிண்டலா கேப்பான். அந்த ஜல்லி கரண்டி இன்னும் என்கிட்ட பத்திரமா இருக்கு.
-ஷா
முழு பேட்டியைக் காண…