இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது. இதில் படத்தில் நடித்துள்ள அனுபமா பரமேஷ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, அமீர், தயாரிப்பாளரும் இயக்குநருமான பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ரெஜிஷா விஜயன் மேடையில் கண்ணீருடன், உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
அவர் பேசுகையில், “கர்ணன் படத்திற்காக நான் மாரி செல்வராஜ் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் பரியேறும் பெருமாள் படம் பார்த்து அவரது மிகப்பெரிய ரசிகையாக விட்டேன்.
அதன்பின்னர் இரண்டு படங்கள் பண்ணிவிட்டார். ஆனால் என்னை கூப்பிடவில்லை. அப்போது அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘இந்த கேரக்டர் உனக்கு செட் ஆகாது’ என்றார்.
திடீரென ஒருநாள் ‘பைசன்’ படத்திற்காக அவர் என்னை அணுகியபோது, இது ஒரு அக்காவின் பாத்திரம் என்பதால், நான் ஏற்றுக்கொள்வேனா என்று தயங்கிக் கேட்டார்.
நான் அவரிடம், ‘அம்மா பாத்திரமாக இருந்தாலும் சரி, தங்கைப் பாத்திரமாக இருந்தாலும் சரி, சிறிய வேடமாக இருந்தாலும் சரி, உங்களது படத்தில் நடிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பம்’ என்று தெரிவித்தேன்.
இந்தப் படத்தின் கதை என்ன, என்னுடைய பாத்திரம் என்ன என்று எதுவும் தெரியாமலேயே, முழு நம்பிக்கையுடன் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நான் இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், மாரி செல்வராஜ் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை மிக விசேஷமானது. அவர் மீது எனக்கு கண்களை மூடிக்கொண்டு நம்பக்கூடிய ஒரு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து அவர் பைசன் படப்பிடிப்பில் நடந்த திகிலூட்டும் சம்பவத்தை குறிப்பிட்டார்.
அவர், “கர்ணன் படத்திற்காக கொஞ்சம் ஸ்விம்மிங் கற்றுக்கொண்டேன். பைசன் படப்பிடிப்பில் ஒருநாள் வந்து, ‘இப்போ தண்ணீக்குள்ள குதிக்கனும், உங்களுக்கு நீச்சல் தெரியும்ல?’ என்று கேட்டார்.
ஸ்விம்மிங் கற்றுக்கொண்டு 4 வருடமாகிவிட்டது. எல்லாம் மறந்துபோச்சு. ஆனாலும் தெரியும் என அவரிடம் சொல்லிவிட்டேன்.
அந்த காட்சியில் முதலில் அனுபமா குதித்தார். அதன்பின்னர் நானும் குதித்துவிட்டேன். ஆனால் எனக்கு ஸ்விம்மிங் மறந்துவிட்டது. சில விநாடிகளில் ஆழத்திற்கு செல்லத் தொடங்கினேன். என் மரணம் நெருங்கிவிட்டதாக உணர்ந்தேன்.
ஆனால் அதற்குள் என்னை காப்பாற்றிவிட்டனர். பின்னர் அங்கு பார்த்தபோது, ஒருவர் தன் கூலிங் கிளாஸைக் கழற்றாமல், ஷூ மற்றும் சாக்ஸுடன் உடனடியாகத் தண்ணீரில் குதித்து என்னைக் காப்பாற்றினார் என தெரிந்துகொண்டேன். அவர் வேறு யாருமல்ல, இயக்குநர் மாரி செல்வராஜ் சார்தான்.
அந்த ஐந்து வினாடிகளில் என்னை உயிரோடு காப்பாற்றியதற்காக அவரை ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என ரெஜிஷா பேசினார்.
