ADVERTISEMENT

“கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்” – கனகராஜின் அண்ணன் தனபால்

Published On:

| By Selvam

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கனகராஜின் அண்ணன் தனபால் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பணிக்கனூரை சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து கொடநாடு வழக்கில் ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் கடந்த வாரம் நில அபகரிப்பு வழக்கில் சேலம் மேச்சேரி போலீசால் தனபால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன தனபால் இன்று (ஆகஸ்ட் 24) ஜாமீனில் வெளியே வந்தார்.

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தனபால், “கொடநாடு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த இரண்டு செல்போன்களை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காவல் அதிகாரிகள் என்னிடமிருந்து வாங்கி தடயங்களை அழித்தனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி கூறியதால் கொடநாடு பங்களாவில் 5 பெரிய பைகளில் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சிலரிடம் கொடுத்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். சிபிசிஐடி காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் செல்வேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தமிழக காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் முதல்வர் ஸ்டாலினை கொடநாடு விவகாரம் தொடர்பாக சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

விக்ரம் லேண்டர்: நேரலையில் பார்த்த தோனி… வைரல் வீடியோ!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share