2026 மே மாதத்தில் நம் நாட்டின் ஏற்றுமதி (India Exports) 18 சதவீதம் அதிகரித்து 45.2 பில்லியன் டாலர் அளவுக்கு வந்துள்ளது. அதேநேரம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அதனால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக, வர்த்தகப் பற்றாக்குறை 28.21 பில்லியன் டாலராக விரிவடைந்தது. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் இருந்த 28.38 பில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில், மாதாந்திர அடிப்படையில் வர்த்தகப் பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 21.88 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த ஆண்டு மே மாதத்தில் நாட்டின் இறக்குமதி 10 சதவீதம் அதிகரித்து 73.41 பில்லியன் டாலர் என்ற மூன்று மாத கால உச்சத்தை எட்டியது. இது கடந்த ஆண்டை விட வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் அதிகரித்தது. உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், நாட்டின் ஏற்றுமதி சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக வர்த்தகத் துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மே மாதத்திற்கான புள்ளி விவரங்கள் “மிக உயர்ந்த மாதாந்திர ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும்” என்றும், தற்போதைய போக்கைக் கருத்தில் கொள்ளும்போது இந்த ஆண்டு ஏற்றுமதிக்குச் சிறப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல் – மே), இந்தியாவின் ஏற்றுமதி 16.09 சதவீதம் அதிகரித்து 88.91 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 15.14 சதவீதம் அதிகரித்து 145.35 பில்லியன் டாலராகவும் இருந்தது. இக்காலகட்டத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 56.44 பில்லியன் டாலராக இருந்தது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் அப்பிராந்தியத்திற்கான இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் அதே அளவை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 5.38 பில்லியன் டாலராக இருந்த மேற்கு ஆசியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி, இந்த ஆண்டு மே மாதத்தில் சற்று குறைந்து 5.30 பில்லியன் டாலராக இருந்தது. அப்பிராந்தியத்திற்கான ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா ஓமானின் மூன்று துறைமுகங்களான டுகம் (Duqm), சோஹர் (Sohar) மற்றும் சலாலா (Salalah) ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிய ஈரான் உடனான 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா-ஈரான் மோதல் ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட சர்வதேச கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்தது. அமைதி ஒப்பந்தம் ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளது. இதற்கிடையில், அரசு மதிப்பீடுகளின்படி, மே மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 36.76 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 19.06 பில்லியன் டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
