’ஈபிஎஸ் 5 நிமிடம் யோசித்தால் அதிமுகவிற்கு விடிவுகாலம்’ – புகழேந்தி பேட்டி!

Published On:

| By indhu

'If you think about Edappadi for 5 minutes it will be a break for AIADMK' - Pugazhenthi

எடப்பாடி பழனிச்சாமி 5 நிமிடங்கள் ஒருங்கிணைவதை பற்றி யோசித்தால் அதிமுகவிற்கு விடிவுகாலம் பிறக்கும் என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குழு

அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆகியோர் இணைந்து “அதிமுக ஒருங்கிணைப்பு குழு”வை கடந்த ஜூன் 8ஆம் தேதி தொடங்கினர்.

எடப்பாடி பழனிசாமி சிந்தித்தால் அதிமுகவிற்கு விடிவுகாலம்

இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று  புகழேந்தியும், கே.சி.பழனிசாமியும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, “கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 10 சதவீதம் தான் அதிமுக வெற்றி பெற்றது.

அதிலும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் அதிமுக வெற்றி பெறமுடியவில்லை. இதை யாரையும் குறை சொல்வதற்காக நான் சொல்லவில்லை.

அதிமுகவில் அனைவரும் இணைந்தால்தான் வெற்றி கிடைக்கும். எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.

ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார். அதிமுக இணைவது ஒருநாள் வேலைதான். மீண்டும் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஒரு மாபெரும் இடத்தை பிடிக்கும்.

டிடிவி தினகரன் அமமுக கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்தால் தாராளமாக அவரை ஏற்றுக்கொள்வோம்.

அதிமுக ஒன்றிணைவது எடப்பாடி பழனிசாமி கையில் தான் இருக்கிறது. அவர் ஒரு 5 நிமிடங்கள் சிந்தித்தால் அதிமுகவிற்கு விடிவுகாலம் பிறந்துவிடும்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கே.சி.பழனிசாமி, “இந்த ஒருங்கிணைப்பு என்பது அதிமுகவிற்காக தற்போது வரை உழைக்கும் தொண்டர்களுக்கு மட்டுமின்றி, மனமாற்றத்தால் அதிமுகவில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணைந்தவர்களுக்கும்தான். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் சில உட்கட்சி காரணங்களால் தற்போது திமுகவில் உள்ளார்.

அதேபோல், செந்தில் பாலாஜியும் அதிமுகவில் இணைவதற்காக வந்தார். ஆனால், அவர் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதனால்தான் திமுகவில் இணைந்தார். இவர்களை போன்ற அனைவரும் அதிமுகவில் இணையவேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம்” எனக் கூறினார்.

பின்னர் பேசிய புகழேந்தி, “எடப்பாடி பழனிசாமி இந்த ஒருங்கிணைப்பில் இணைவாரா என்ற சந்தேகம் அதிகமானவர்களுக்கு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி யாருமில்லை எங்களது பழைய நண்பர், நல்லவர், வல்லவர். நிச்சயமாக அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு அவர் ஒப்புக்கொள்வார். ஏனெனில், கட்சியை காப்பாற்ற வேண்டிய சூழலில் நாம் தற்போது உள்ளோம்.

இப்படியே அதிமுக சிதறி இருக்குமேயானால் தேசிய கட்சிகள் உள்ளே வந்துவிடும். திராவிட கட்சிகள் தான் தொடர்ந்து தமிழகத்தை ஆள வேண்டும். எனவே, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தற்போது அவசியமாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காலை வெட்டிகொண்ட அதிமுக தொண்டர்: போன் போட்ட சசிகலா… நேரில் சந்தித்த எடப்பாடி

புதிய அமைச்சரவையில் தென் மாநில அமைச்சர்களின் லிஸ்ட்… கூட்டணி கட்சி அமைச்சர்கள் யார் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share