சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடந்த மாதம் கடிதம் எழுதி இருப்பதாக தி இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
‘தி இந்து’ நாளேட்டில் இன்று (செப்டம்பர் 19) வெளியான செய்தியில், சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழக அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதி உள்ளார். அதில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது; தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை. பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும்.
தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர்- நிர்வாகமான Airports Authority of India – AAI-ஐ மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது சென்னை விமான நிலையத்தின் ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை, அடிப்படையில் விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட முடிவு செய்ததன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் “நாங்கள் கடிதத்தை அனுப்பிவிட்டோம். இப்போது மத்திய அரசு இதற்கு முன்னுரிமை அளித்து, விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கான பணிகளைத் தொடங்கும் என்று நம்புகிறோம்” என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
