சென்னை ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்த விபத்தில் சிறுமி உள்பட 3பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15-வது தெருவைச் சேர்ந்தவர் ரோஜா. கணவனை இழந்த இவர் தன்னுடைய மகன் சங்கர் ராஜ், மருமகள் அனிதா, பேரப்பிள்ளைகள் கிருத்திகா, கெளதம் உள்ளிட்டோருடன் வசித்து வருகின்றார்.
இந்தநிலையில் நேற்று இரவு இவர்களது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. சிலிண்டர் வெடித்ததை தொடர்ந்து ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டியும் வெடித்துள்ளது.
இந்த விபத்தில் ரோஜா, மகன் சங்கர் ராஜ், பேத்தி கிருத்திகா ஆகியோர் மீது தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டின் அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காயமடைந்தவர்களை சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த தீவிபத்தில் ரோஜாவிற்கு 80 சதவிகிதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
சங்கர் மற்றும் கிருத்திகாவிற்கு 30 சதவிகிதமும், மகன் கெளதம் ராஜாவிற்கு காலில் சிறிய தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சங்கர்ராஜ் வீட்டில் கேஸ்சிலிண்டர் கசிந்துள்ளது. அதனால் புதிய ரெகுலேட்டர் மாற்றியுள்ளார்கள். புதிய ரெகுலேட்டர் மாற்றியும் தொடர்ந்து கேஸ்சிலிண்டர் கசிந்துள்ளது. இதனால் சங்கர்ராஜ் வீட்டில் உள்ளவர்களிடம் கேஸ் பற்றவைக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் நேற்று இரவு ரோஜா கேஸ் பற்றவைத்ததால், கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டால் உடனடியாக ரெகுலேட்டரை அணைத்து விடுவதுடன் வீட்டில் உள்ள ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். அவசர உதவிக்கு 1096 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும்.
செல்வம்
என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? நொந்து போன காயத்ரி ரகுராம்