சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி பணியிடங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
சொந்த வீடு, கட்டிடம், வணிக வளாகம் வைத்திருப்பவர்கள் சொத்து வரி செலுத்த வேண்டும். இது சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக உள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று காலை முதல் செய்திகள் வெளியாகின.
அதாவது 5,000 ரூபாய் வரி கட்டிய உரிமையாளருக்கு தற்போது 28 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3 முதல் 4 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் வந்த நிலையில் இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரவும் உண்மைக்கு மாறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வந்த சொத்துகளுக்கு தாங்கள் அளித்த (self declaration) உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு செய்து அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருத்திய மதிப்பீட்டில் ஆட்சேபனை இருப்பின், அறிவிப்பு பெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடுகள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
எனவே பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வரப்பெரும் உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
