தமிழ்நாட்டில் கோவில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்க முந்தைய திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிதியில் திருச்செங்கோட்டு, பழனி தண்டாயுதபாணி கோவில் நிதியில் ஒட்டன்சத்திரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளம் ஆகிய இடங்களில் கல்லூரிகள் அமைக்க முந்தைய திமுக ஆட்சியில் அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்த உத்தரவுகளை எதிர்த்தும், கோவில்களின் நிதியில் கல்லூரிகள் அமைக்க தடை விதிக்க கோரியும் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மனோகரன் அமர்வு முன்பு ஆகஸ்ட் 11-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.பரணிதரன், சென்னை கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் அமைக்கப்பட்டு அங்கு மாணவர்கள் படித்து வருவதாகவும், கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் கல்லூரிகளில் இந்து சமய படிப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், கோவில் நிதியைக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று தெளிவுபடுத்தி, அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
