இயற்கை பேரிடர் நிவாரன நிதியாக தமிழ்நாட்டுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.9,051 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மக்களவையில் விசிக பொதுச்செயலாளர் ரவிகுமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: நாட்டில் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் குறுகிய காலப் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.
சொட்டு நீர்ப் பாசன திட்ட நிதி விடுவிப்பு
தமிழ்நாட்டில் நீர்ப்பாசனத் திறனை மேம்படுத்த சொட்டு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.255.64 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.127.82 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
உழவர் பயிற்சி இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ஆத்மா திட்டம் ரூ44.45 கோடி
ஆத்மா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.44.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு ரூ9,051 கோடி நிதி
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள மாநிலப் பேரிடர் நிதியத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2026-27 முதல் 2030-31 வரையிலான காலத்திற்கு- 5 ஆண்டுகளுக்கு ரூ.9,051 கோடி (16-வது நிதி ஆணைய பரிந்துரைகளின் படி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்தார்.
