நடிகர் விஜய் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 2) நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்தார்.
விஜய் தொடங்கி இருக்கும் புதிய கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யின் பெயர் தான் டிரெண்டிங்கில் உள்ளது.
விஜய்யின் இந்த அரசியல் பயணத்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் இந்த முடிவு குறித்து சில விமர்சனங்களையும் முன்வைத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கப்பட்டது குறித்து பேசிய பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன், டைட்டிலிலேயே flop ஆன கட்சி இதுதான் என்று விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “இப்படி ஒரு தலைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. தமிழக மக்கள் கழகம் என்று வைத்திருந்தால் கூட ஒரு அர்த்தம் இருந்திருக்கும், தமிழக வெற்றி கழகம் என்பதில் அர்த்தமே இல்லை. தலைப்பை சொல்லும் போதே உங்கள் கட்சியின் கொள்கைகளை உணர்த்தும் வகையில் அது இருந்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த தலைப்பில் அது போன்ற எந்த விஷயமும் இல்லை. வெற்றி கழகம் என்று பெயர் வைத்து விட்டு தோற்றுவிட்டால் என்ன செய்வார்கள்? விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். அவரை நான் மதிக்கிறேன். அவர் நினைத்ததை சாதித்து விட்டார்.
ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டால் எதிர்காலத்தில் விஜய் என்ன செய்து விடுவார் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும்.
ஒரு பெரும் செல்வாக்குடன் அரசியலுக்குள் வருகின்றீர்கள், உங்களை பார்க்கும் மக்கள் நம்மை மீட்க வந்த இயேசுவே இவர்தான் டா என்று சொல்லும் அளவிற்கு நீங்கள் வர வேண்டும் என்று தான் சொல்கிறேன். அப்படி ஒரு பெரும் நம்பிக்கையை மக்களுக்கு கொடுங்கள் அந்த நம்பிக்கை இன்னும் வரவில்லை.
ஒரு டெம்ப்ளேட் அரசியலைத் தான் விஜய்யும் செய்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு ஒரு புதிய கட்சி தொடங்கும் போது ஒரு அறிக்கை விடுவார்கள், அதே போன்ற அறிக்கையை தான் தற்போது விஜய்யும் வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் சாதி மத பேதமற்ற மக்களை நாட்டை உருவாக்குவேன் என்று உள்ளது, எத்தனை ஆண்டுகளாக இதை கேட்டுக் கொண்டிருக்கிறோம் சாதி மதம் போய்விட்டதா? அதை வைத்து தான் இன்று அரசியலே இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்து மட்டும் என்ன செய்யப் போகிறீர்கள்?
கட்சிக்காக ஒரு 50 தலைப்புகள் எழுதி தரப்பட்டிருக்கிறது. அதை எழுதி கொடுத்தது புஸ்ஸி ஆனந்த் தான். இன்னும் கொஞ்சம் விவாதம் செய்து தலைப்பு வைத்திருந்தால் இன்று அது கேலி பொருளாக மாறி இருக்காது.
தமிழக வெற்றி கழகம் என்ற தலைப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், என்னை போன்ற சாமானியர்களுக்கு இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
STR50: சிம்புவை இயக்கப்போவது யாருன்னு பாருங்க!
விலை குறைந்த தங்கம்: எவ்வளவுன்னு பாருங்க!
