வாக்கு எண்ணும் பணி எத்தனை மணிக்கு தொடங்கும்?: வழிமுறைகள் வெளியீடு!

Published On:

| By Kavi

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  அர்ச்சனா பட்நாயக் இன்று (ஏப்ரல் 27) வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  

ADVERTISEMENT

“முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

ADVERTISEMENT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

ADVERTISEMENT

500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 இலட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 இலட்சம் அலுவலர்கள் (80%) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sectorல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 இலட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 இலட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.

85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12 D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 இலட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.

இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8:00 பெறப்படும். 

வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 இலட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share