நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று (ஏப்ரல் 29) ஷீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். எடப்பாடி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தார். சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நடிகர் விஜய் நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டார். விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற விஜய், அங்குள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றார். பாபாவின் பாதத்தைத் தொட்டு தரிசனம் செய்த அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, புனித மெக்கா நகருக்கு விஜய் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து புனிதத் தலங்களுக்கும் அவர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடு ஷோ நடத்தியபோது, விஜய் திருச்சி அந்தோணியார் ஆலயத்துக்கு சென்று முழங்காலிட்டவாறு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு கொட்டப்பட்டு பச்சநாச்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அருகில் உள்ள மசூதிக்கும் சென்று வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
