சவால் விடுப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல – கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

CPI

ஆளுநர் மாளிகை அரசியல் சாசனத்திற்கு விரோதமாக களம் இறங்கினால் கூட்டாட்சி காக்க இடதுசாரி ஜனநாயக சக்திகள் களம் இறங்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் என்பது நியமனப் பதவி என்ற எல்லைகளுக்குள் நிற்காமல் ஆய்வுக் கூட்டங்கள், நேரடியாக நிர்வாக நடைமுறைகளில் தலையிட முயற்சிப்பது என்பதெல்லாம் பன்வாரிலால் புரோகித் காலத்தில் துவங்கி ஆர்.என்.ரவி காலத்திலும் தொடர்ந்து கடும் எதிர்ப்புக்கு ஆளானது. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் ஆளுநர் அத்துமீறுவது மையத்தில் அதிகாரத்தில் குவிப்பதென்ற பாஜக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே ஆகும். இது அவர்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட அரசியல் பணி என்ற முறையிலேயே அர்லேகர் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய அரசாங்க உருவாக்கத்திலேயே அவரது நடவடிக்கைகளில் சந்தேக நிழல் படர்ந்தது. அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு மாறாக அரசாங்க உருவாக்கத்தை இழுத்தடித்தார் என்பதை தமிழ்நாடு கண்டது. முழு நேர ஆளுநரே கூட இந்த நெறிகளை மீற முடியாது என்ற நிலையில், பொறுப்பு ஆளுநராகத்தான் இருக்கிறோம் என்ற குறைந்தபட்ச கட்டுப்பாடு கூட அவரிடம் இல்லை என்பதும் கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

நேற்று மதுரையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை ஆர்லேகர் நடத்தியுள்ளார். அது முடிந்து மதுரையில் “வேர்களைத் தேடி” என்ற நிகழ்ச்சியில் பேசும் போது வைகை ஆற்றை மதுரை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும்; அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால் ஆளுநர் மாளிகையே வைகையை சீரமைக்க களமிறங்கும் என்று பேசி உள்ளார்.

இளைஞர்களுக்கு வைகையை சீரமைக்க வேண்டுகோள் விடுப்பது தவறில்லை; ஆனால் ஆளுநர் மாளிகையே களமிறங்கும் என்று சவால் விடுப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல, அரசியல் சாசனம் அவருக்கு தந்துள்ள அதிகாரமும் அல்ல. இந்திய நாட்டின் கூட்டாட்சி கோட்பாடு பற்றி அவர் இதன் மூலம் இளைஞர்களுக்கு தருகிற செய்தியும் அபத்தமானது ஆகும்.

ADVERTISEMENT

ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேதாஜியின் ஐ.என்.ஏ “வேர்களைத் தேடி” என்பது குறித்தது ஆகும். ஆனால் அங்கு போய் அவர் தந்துள்ள விளக்கம் அவருக்கு ஆசி வழங்குகிற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி நின்றதை மறைப்பதே ஆகும். ஆகவே தலைப்புக்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக பேசி சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டுள்ள பாஜக குறுக்கு வழியில் ஆளுநரைப் பயன்படுத்தி அதிகாரத்தை சுவைக்கிற முயற்சியே அன்றி இது வேறில்லை.

ADVERTISEMENT

ஆளுநர் அர்லேகரின் மதுரை ஆய்வுக் கூட்டம், அவரின் சர்ச்சைக்குரிய உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநர் தன்னுடைய அரசியல் சாசன விரோதப் போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இவ்வாறு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் கூட்டாட்சி கோட்பாடுகளை பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டின் இடதுசாரி, ஜனநாயக சக்திகள் களமிறங்கும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு எச்சரிக்கை விடுக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நேற்று (02.07.2026) காலை மதுரையில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசுத் திட்டங்கள் அமலாக்கம் பற்றி மட்டும் அல்லாமல், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் ஒழிப்பு, பொது சுகாதாரம், நீர்நிலைகள் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு அதிகாரத்தை அத்துமீறிய செயலாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் கீழ் அரசிடம், ஆளுநர் தனக்கு வேண்டிய விபரங்களை கேட்டுப் பெற கடமைப்பட்டவர். இதனைத் தவிர்த்து அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது, மக்களாட்சி முறைமையை தகர்க்கும் செயலாகும். இத்தகைய செயலில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், ஆளுநர் அத்துமீறல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share